தமிழ்நாடு
தமிழிசை உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கண்டுபிடிப்பு!
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசைக்கு, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநராக நேற்று அவர் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
தற்போது புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ததே அரசியல் குழப்பத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வரும் 22 ஆம் தேதிக்குள் புதுச்சேரி அரசு, தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை கெடு விதித்துள்ளார்.
இப்படியான சூழலில் ஓ.எஸ்.மணியன், ‘தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். இப்போது அவர் பாஜக அரசால், குடியரசுத் தலைவரால் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.