இந்தியா
முழுமையாக முடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பேரணி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அமர்வு தொடங்கியதும் ராகுல் காந்தி லண்டனில் பேசிய கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. மேலும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் இதே காரணங்களுக்காக நாடாளுமன்றம் முடங்கியது.
இந்த சூழலில் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து அமளியை நீட்டிக்க செய்தது. அதானி விவகாரத்தை திசைதிருப்பவே ஆளும் கட்சி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிகிறது. இன்றும் அவை அமளியால் முடங்கியது. இதனையடுத்து தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றக்கோரி பேரணி சென்றனர். தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.