சினிமா
ஓவியாவை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
![Oviya 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/Oviya-1.jpg)
நடிகை ஓவியா நடித்துள்ள 90எம்எல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெண்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை பேசுதல் உள்ளிட்ட காட்சிகள் அமைந்துள்ள இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை வாரியம்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளையும், படத்தின் இயக்குநரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்த அமைப்பின், மகளிரணி மாநில அமைப்பாளர் ஆரிபா ரசாக், பெண்களின் புனிதத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் 90எம்எல் படம் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைச் சீரழிக்கும் வகையில் உள்ளது படம். கலாச்சார சீரழிவுக்குக் காரணமான 90 எம்எல் திரைப்படத்தை உடனே தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த 90எம்எல் படத்தில் நடித்த நடிகைகள், இயக்குநர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்துத் திரையிட மாட்டார்கள் என்றார். இந்த படத்தில் பிரபல நடிகை ஓவியா பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சிம்புவும் இதில் நடித்துள்ளார்.