தமிழ்நாடு
கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி: தாம்பரத்தில் பரபரப்பு!
பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை அவரது காதலர் கத்தியல் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுவேதா என்ற கல்லூரி மாணவி ரயில் நிலையத்திற்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் அந்த மாணவியை திடீரென வழிமறித்து அவர் மீது சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த கல்லூரி மாணவி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவியை குத்திய இளைஞர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து கத்தியால் குத்தப்பட்டு பலியான கல்லூரி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தன்னை தானே கழுத்தில் குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவரை கத்தியால் குத்திய இளைஞரின் பெயர் ராமு என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கல்லூரி மாணவியை அவர் காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த காதலுக்கு ஸ்வேதா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.