தமிழ்நாடு
பள்ளிக்கு வந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்த கோவை மாணவி: அதிர்ச்சி தகவல்
கோவையில் பள்ளிக்கு வந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவசுந்தரி. சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில் சிவசுந்தரி வழக்கம்போல் இன்று காலை உற்சாகமாக பள்ளிக்கு சென்றார்.
பள்ளிக்கு சென்ற சில நிமிடங்களிலேயே அவர் திடீரென மயக்கமடைந்தால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கு சந்தோசமாக உற்சாகத்துடன் சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு உயிர் இழப்பிற்கான காரணம் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
மாணவிக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் அவர் உயிரிழந்தாரா? என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.