தமிழ்நாடு
ஹோட்டலில் சாப்பிட்டவர்களை லத்தியால் அடித்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்!
கோவையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை லத்தியால் போலீஸ் எஸ்ஐ ஒருவர் அடித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக உணவகங்கள் இரவு 11 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் கோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு உணவகத்தில் பெண்கள் உள்பட சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டலில் வந்த எஸ்.ஐ முத்து என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது.
இது குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் எஸ்.ஐ முத்து மீது நடவடிக்கை எடுத்தனர். அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கோவை காந்திபுரம் ஹோட்டலில் சாப்பிட்டவர்களை அடித்த எஸ்.ஐ முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ முத்து கட்டுப்பாட்டு அறை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்து காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.