தமிழ்நாடு
கோவை மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது!
![chinmaya principal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/chinmaya-principal.jpg)
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்த முதல்வர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மாணவி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது என எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட ஆசிரியர் மிதுன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பள்ளி முதல்வரையும் கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் காரணமாக பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் தேடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கோவை சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.