தமிழ்நாடு
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததாகவும் தேர்தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்றும் அதன் பின்னரே தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 29 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் 15 ஆயிரத்து 152 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 5790 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் வீடு வீடாக வாக்கு சேகரிக்க மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜனவரி 31ஆம் தேதி வரை பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதியும் நடைபெற்ற பின்னர் மார்ச் 4-ஆம் தேதி மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்ததற்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் இதில் கவுன்சிலர்கள் மறைமுகமாக வாக்களிப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.