தமிழ்நாடு
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளின் எடை குறைந்துள்ளதா? அதிர்ச்சி தகவல்
தமிழக அரசு சமீபத்தில் நகை கடன்களை தள்ளுபடி செய்தது என்பதும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.
இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் நகைகளை திரும்ப பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை திரும்ப பெற்ற போது ஒரு சில நகைகளில் எடை குறைந்துள்ளதாகவும் நகைகளில் ஒரு சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நகை கடன் தள்ளுபடி பெற்றதை அடுத்து கூட்டுறவு வங்கியில் சென்று நகைகளை திரும்ப பெற்றனர். அவர்கள் வாங்கிய நகைகளில் ஆங்காங்கே சில சிறு துண்டுகள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது .
இதனை அடுத்து வேளாண் கூட்டுறவு வங்கியில் புகார் அளித்தபோது கூட்டுறவுதுறை அலுவலரிடம் இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் நகைகளின் சிறு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.