தமிழ்நாடு
தங்க நகைக்கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பு!
தேர்தலுக்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அந்த வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு கடைகளில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தங்க நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்தவர்களின் கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருந்தவர்கள் விபரங்களை வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
மார்ச் 31-ஆம் தேதி வரை 5 சவரன் தங்க நகை அடமானம் வைத்து கடன் வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் இந்த விபரங்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து கூட்டுறவு அதிகாரிகள் தங்கள் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து இருந்தவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தங்க நகை கடன் தள்ளுபடியில் உங்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதை கூறி, ஆதார் எண், குடும்ப அட்டை, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி வருவதாகவும் இந்த விவரங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி அழைப்பு வந்தவர்கள் தங்களுடைய தங்க நகை கடன் விரைவில் தள்ளுபடி ஆகும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.