தமிழ்நாடு

வெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்!

Published

on

முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது துறை சார்ந்த பொறுப்புக்களை ஏதாவது ஒரு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

தனது வெளிநாடு பயணத்திட்டத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி அடுத்து அமெரிக்கா என மொத்தம் 13 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். 13 நாட்கள் முதல்வர் வெளிநாடு செல்வதால் அவரது துறைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்பது மரபு. அந்த பொறுப்பு துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் போகுமா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி அல்லது வேலுமணி இருவரில் ஒருவரிடம் கொடுப்பாரா என்பதுதான் அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி யாரையும் நம்பாமல் தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய முடிவுகள் குறித்து வெளிநாட்டில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவாராம். மேலும் முக்கிய கோப்புகளுக்கு முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்தே பேக்ஸ் வழியே ஒப்புதல் அளிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செல்கிறார். பொதுவாக ஒரு முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்துச் செல்வது வழக்கம். ஆனால், மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லையா என சந்தேகம் எழுகிறது. வெளிநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது தனது பதவி பறிபோகுமா என்று பயப்படுகிறாரா என்று தெரியவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version