தமிழ்நாடு
நீட் தேர்வு விவகாரம்: வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான என்.ஆர். இளங்கோ, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆகியோர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் நீட் தேர்வு தொடர்பாக சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சமீபத்தில் ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவிற்கு எதிராக பாஜக தொடுத்த வழக்கில், இந்த குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதா? என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்த கூடாது என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து ஏகே ராஜன் குழு குறித்து உயர் நீதிமன்றத்திற்கு பதில் அளிப்பது குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.