தமிழ்நாடு
மிலாடி நபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்: ஆயுதபூஜைக்கு வாழ்த்து என்ன ஆச்சு என நெட்டிசன்கள் கேள்வி!
நாளை இஸ்லாமிய பெருமக்கள் மிலாடி நபி கொண்டாட இருக்கும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து செய்தி கூறியுள்ளார். அவர் தனது செய்தியில் கூறியிருப்பதாவது;
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான ‘மிலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.
ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள்.
அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து, வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமையபெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிலையில் இந்த வாழ்த்துச் செய்தியில் கமெண்ட்ஸ் அளித்துள்ள நெட்டிசன்கள் முஸ்லிம் மதத்தினர் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்துக்கள் பண்டிகையான சரஸ்வதி பூஜைக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் ஒரு முதலமைச்சர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் அனைத்து மத மக்களுக்கும் நீங்கள் தான் முதல்வர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். எந்த இந்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லாத முதல்வர் மதச் சார்பற்ற சமூக நீதிக்கான அரசு என்று சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த கமெண்ட்ஸ்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.