இந்தியா
முதல்வரின் 3 நாள் டெல்லி பயணம் 4 நாட்களாக நீட்டிப்பு: அமித்ஷா காரணமா?
டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் செல்லவிருக்கும் நிலையில் இந்த பயணம் மூன்று நாளென இருந்த நிலையில் தற்போது 4 நாள் பயணமாக மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
டெல்லியில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டடத் திறப்பு விழாவுக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செல்ல உள்ளார். இந்த நிலையில் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, சோனியா காந்தி மற்றும் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டது.
முதல் நாள் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு அதற்கு அடுத்த நாள் அண்ணா அறிவாலய கட்டடத்தை திறக்கும் முதல்வர் ஸ்டாலின் மூன்றாவது நாளில் சோனியா காந்தி உள்பட எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது முதல்வரின் பயணம் 4 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூடுதல் நாளில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒரு சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணம் திடீரென 4 நாளாக மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.