தமிழ்நாடு
பல் பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங்: அதிரடியாக சஸ்பெண்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்!
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
ஏஎஸ்பி பல்வீர் சிங் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது. அந்த வகையில் இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட, அம்பாசமுத்திர ஏஎஸ்பியை பணி இடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.