தமிழ்நாடு
தரமற்ற பொங்கல் பரிசுப்பொருட்கள்: சாட்டையை சுழற்றுகிறாரா முதல்வர் ஸ்டாலின்?
பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நேரடியாக களம் இறங்கி விசாரணை நடத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருள்கள் தரப்பட்டன. இந்த பொருட்கள் தரமாக இல்லை என பொதுமக்கள் மத்தியில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வந்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே பொங்கல் பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்க நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்ய உள்ளார்.
இந்த ஆலோசனையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறு எங்கே நடந்தது என்பதை நாளை கண்டுபிடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் முடிவு செய்திருப்பதாகவும் இனி ஒருமுறை இப்படி ஒரு புகார் வரக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஆர்டர் கொடுத்த அதிகாரிகள் மற்றும் ஒரு சில முக்கிய அமைச்சர்களும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.