தமிழ்நாடு
புதிதாக என்னென்ன தளர்வுகள்: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முழு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்து திறக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை ஆறு மணி விழா நிறைவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு நீடிப்பது மற்றும் கட்டுப்பாடுகள், தளர்வுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவ வல்லுநர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆலோசனை மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார்.
மேலும் பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.