தமிழ்நாடு
ஊரடங்கில் கூடுதலாக என்னென்ன தளர்வுகள்: முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும், அதே போல் டாஸ்மாக் பார் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து கூடுதல் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தீபாவளி நேரத்தில் பொது இடங்களில் மக்கள் குவிய வாய்ப்பு இருப்பதை அடுத்து ஒரு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க நாளை ஆலோசனை கூட்டத்தில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நாளை ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.