தமிழ்நாடு
ஊரடங்கு ரத்து, கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கை தளர்த்துவது மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேரம் ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும், மற்றும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் மெரினா பீச் குறிப்பிட்ட எந்த கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு விரைவில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறைக்கப்படும் என்றும் கடற்கரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திரையரங்குகளில் 75% அல்லது 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் இன்று ஆலோசனை செய்த பின்னர் இது குறித்து முழுமையாக அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.