தமிழ்நாடு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதியை ஒழிக்கும் கிராமத்திற்கு பரிசு: முதல்வர் அறிவிப்பு
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அதனை அடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் கூறியபோது சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சியுடன் செயல்பட சட்டம் இயற்றப்படும் என்றும் மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமையை பாதுகாப்பு நல ஆணையம் உறுதி செய்யும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரச்சினையைத் தீர்க்கவும் நல ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு இருந்து வருகிறது என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இரட்டைக்குவளை ஒழிப்பு, சமத்துவபுரங்கள், பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்தியது ஆகியவையே இதற்கான எடுத்துக்காட்டுகள் என்றும், எனவே ஜாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த சில நிமிடங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இதுகுறித்து கூறியபோது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாக கூறிய முதலமைச்சர் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்துவது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.