தமிழ்நாடு
பாஜகவின் ‘கொங்குநாடு’ கோஷம்- சேலம்நாட்டுக்கு முதல்வர் இவரா?
தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. இப்படிச் சொல்வதால் கொதிப்படைந்துள்ள வலதுசாரிகள், ‘கொங்குநாடு’ கோஷத்தை எழுப்பி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், தன் ட்விட்டர் பெயரை ‘முதல்வர், சேலம்நாடு’ என்று மாற்றியமைத்து உள்ளார். மேலும் அவர், ‘சங்கி மங்கிஸ்… உங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது. மகிழ்ச்சியா?’ என்றும் கேட்டு வலதுசாரிகளை கேலி செய்து உள்ளார்.
Sonki Monki’s … Your demand is being fulfilled. Happy now !! pic.twitter.com/ARJOHTIloF
— Chief Minister, Salemnadu (@piyushmanush) July 11, 2021
இதற்கு முன்னர் திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி, ‘தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. அது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. நாங்கள் ஒன்றிய அரசு எனக் கூப்பிடுவது சட்டத்தின்படி சரியே. அப்படித் தான் கூப்பிடுவோம். அதில் ஒன்றும் தவறில்லை. அது நாட்டுக்கு எதிரானதும் இல்லை’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பாஜக தரப்பினர், ‘கொங்குநாடு விவகாரம் தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு மக்களின் விருப்பத்து ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறி வருகின்றனர்.