தமிழ்நாடு
விதிமுறையை மீறிய எடப்பாடி பழனிசாமி: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்!
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தாக்கி அழித்தது. இதில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி, பின்னர் இந்திய அரசால் மீட்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இதனை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் தங்கள் பிரச்சாரங்களில் ராணுவத்தினரைக் குறிப்பிடுகையில் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதீஷை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நாட்டின் பாதுகாப்பை மோடியால்தான் உறுதிப்படுத்த முடியும். பாகிஸ்தானில் சிக்கிய விமானப்படை வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனை பாதுகாப்பாக மீட்ட பெருமை பிரதமர் மோடியைச் சாரும் என பேசினார். இதனையடுத்து முதல்வர் எடப்பாடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய பேச்சாகும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம். இப்படிப்பட்ட பிரச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. விதிமுறைகளை மீறிப் பேசியதற்காக முதல்வர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.