தமிழ்நாடு
மக்களை சந்திக்க பயமா?: அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து சந்தித்த முதலமைச்சர்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஐந்து நாட்களுக்கு பின்னர் சந்திக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் சந்தித்து, நிவாரண உதவிகளை கொடுத்ததோடு, அவர்களிடம் மட்டும் குறைகளை கேட்டறிந்ததாக பேசப்படுகிறது.
புயல் வருவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு, புயலுக்கு பின்னர் நிவாரண பணிகளில் கோட்டை விட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடும் கோபத்தில் உள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து போராட்டங்களும், அதிகாரிகள், அமைச்சர்களை சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் காரணமாகவே முதல்வரின் வருகை கூட தாமதப்படுத்தப்பட்டதாக பேசப்படுகிறது. மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதால் புயல் பாதித்த பகுதிக்கு செல்லவிருக்கும் முதல்வரை அவர்கள் முற்றுகையிட வாய்ப்பு உள்ளது அல்லது கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை தேர்ந்தெடுத்து சந்தித்ததாக பரவலாக பேசப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவித கோஷங்களும் எழுப்பவிடாமல் அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் முதல் அமைச்சரை சந்திக்க வைத்து நிவாரண உதவிகளை பெற வைத்ததோடு, அவர்களிடம் மட்டும் குறைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.