தமிழ்நாடு
ஓகி புயல், கஜா புயல்: பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்னமும் சந்திக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று சந்திக்க சென்றார். ஆனால் அவர் நேரடியாக மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை சந்தித்துவிட்டு மக்களை சந்தித்தது போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
நிவாரண பணிகளில் அரசு கோட்டைவிட்டதால் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் மக்களை சந்தித்தால் எதாவது எதிர்வினைகள் இருக்கும் என்ற அச்சத்தில் முதல்வர் வரும் மாப்பிள்ளையார்குளம் பகுதிக்கு வழிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவித கோஷங்களும் எழுப்பவிடாமல் அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாக பேசப்படுகிறது.
மேலும் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் முதல்வரை சந்திக்க வைத்து நிவாரண உதவிகளை பெற வைத்ததோடு, அவர்களிடம் மட்டும் குறைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது.
இதே போல தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஓகி புயல் வந்து 10 நாட்களுக்குப் பிறகு பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர், மக்கள் நடமாட்டமே இல்லாத விவசாய நிலத்தையும், கல்லூரி ஒன்றில் வைத்து மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து விட்டு நிவாரணத் தொகையை உயர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.