தமிழ்நாடு
முதல்வர் மீது ஊழல் புகார்: 10 நாட்கள் கழித்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்!
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக ஊழல் புகார் கொடுத்துள்ளது. மேலும் அமைச்சர்கள் பலர் மீதும் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை திமுகவும் ஸ்டாலினும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக புகார்களையும் திமுக அளித்து வருகிறது. இந்நிலையில் திமுகவை கண்டித்து ஈழ விவகாரத்தை கையிலெடுத்து அதிமுக கண்டனப் பொதுக்கூட்டத்தை நேற்று நடத்தியது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திமுகவை விமர்சித்து பேசினார்.
அப்போது, அமைச்சர்களின் பெயரில் ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறும் புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளனர். இனி எதைச் சொன்னாலும் எடுபடாது. முதல்வர் மீது புகார் அளித்துள்ளேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இன்னும் 10 நாட்கள் கழித்து என்ன நடக்கிறது என்று பாருங்கள் என தெரிவித்தார்.