செய்திகள்
இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்….
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஜனவரி 31ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடையவுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா அல்லது தளர்வு அளிப்பதா, இரவுநேர ஊடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது ரத்து செய்வதா என இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாளை அதாவது ஜனவரி 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், வருகிற 30ம் தேதி முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தினமும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.