தமிழ்நாடு
ஒத்தி வைக்கப்படுகிறதா 12ஆம் வகுப்பு தேர்வு? மே 3ல் இல்லை என தகவல்
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு மே 3ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. அதேபோல் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கலாமா என முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.