சினிமா
ஜெய்பீம் சர்ச்சை!… சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திரை பிரபலங்கள்….
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், இப்படத்தை பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் தோன்றும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் போன்றும் வன்னியர் சமுதாயம் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போன்றும் ’ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு மிரட்டும் தொனியில் ஒரு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யா சரியான பதிலடியும் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, சூர்யா படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம், அவரை உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என்றெல்லாம் வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதோடு, சூர்யா மன்னிப்பு கேட்பதோடு, ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என பாமாக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, #WeStandWithSuriya என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதேபோல், சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகில் யாரும் பேசாத நிலையில் தற்போது மெல்ல மெல்ல ஆதரவுக்குரல் எழுந்து வருகிறது.
சூர்யா மீது வன்மம் காட்ட வேண்டாம என தென்னிந்திய வர்த்தக சபை அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதியது. இயக்குனர் பாராதிராஜவும் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார். அதில் ‘பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல.
ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே..
எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.
இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது’ என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், இயக்குனர் வெற்றிமாறனும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் ‘ஜெய் பீம்’ படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம் எனக்கூறியிருந்தார். அதேபோல், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் #WeStandWithSuriya என்கிற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளனர்.