டிவி
சித்ரா வழக்கில் திடீர் திருப்பம் – விசாரணை வளையத்துக்குள் வந்த நடிகை!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக இருந்த இன்னொரு நடிகையிடமும் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அந்த நடிகை சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சரண்யா என்று சொல்லப்படுகிறது. படப்படிப்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சித்ரா, தற்கொலை செய்து கொண்டாரா என்கிற கோணத்தில் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. சித்ரா, கடைசியாக தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல். இனி வரும் நாட்களில் இந்த விஷயங்கள் குறித்து உண்மைத் தகவல்கள் வெளிவரும்.
சில நாட்களுக்கு முன்னர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், ‘போலீஸ் விசாரணை ஒருதலைபட்சமாக இருக்கிறது. சித்ரா மரணம் தொடர்பாக அனைத்துக் கோணங்களில் விசாரணை செய்ய வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளார்.
இதையொட்டி அவர், சித்ரா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார். சித்ராவும் அவரது கணவர் ஹேம்நாத்தும் அம்பத்தூருக்கு அருகில் இருக்கும் ஓர் திருமண மண்டபத்தில், தங்களது திருமணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த மண்டபத்தை இரு வீட்டுத் தரப்பும் சித்ரா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்று பார்த்துள்ளன. அப்போது ஹேம்நாத்தும் சித்ராவும் மண்டபத்தைப் பார்வையிடுகின்றனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஹேம்நாத் தரப்பில், சித்ராவின் நட்பு வட்டம் மற்றும் அவர் துறை சார்ந்த நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காவல் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது.