உலகம்
வயசு பசங்க விந்தணு தான் வேண்டும்: அலையும் சீனா!
ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வந்த சீனா தற்போது மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த ஆண்டு புதிதாக பிறந்தவர்களை விட உயிரிழந்தவர்களே அதிகம். இளைஞர்கள் பலர் திருமணத்தை தள்ளிப் போடுவதாலும், கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதாலும் குழந்தையின்மை சீனாவில் அதிகரித்து வருகிறது.
சீனாவில் தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளுங்கள் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூட அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது விந்தணு தானம் செய்ய முன்வருமாறு கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
கடந்த 15 ஆண்டுகளில் சீன இளைஞர்களின் விந்தணு தரம் குறைந்துவிட்ட நிலையில், விந்தணு தானம் செய்வதற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாவும் தயாராக இருப்பவர்களை வலை வீசி தேடி வருகின்றன சீன விந்தணு வங்கிகள். சுகாதாரமான எவ்வித மரபணு நோய் பாதிப்புகளும் இல்லாத 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு விந்தணு தானம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விந்தணு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு 60 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.