இந்தியா
மக்களவையில் பாட்டுப்பாடிய ப.சிதம்பரம்: ரசித்து புன்னகைத்த நிர்மலா சீதாராமன்!
மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி பாரதியார் பாடல் ஒன்றை பாடினார்.
முன்னதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது புறநானூறு பாடல் வரிகளை குறிப்பிட்டார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் வரிகளை அவருக்கு சுட்டிக்காட்டி பட்ஜெட்டை விமர்சித்தார். இந்நிலையில் தற்போது ப.சிதம்பரம் பாரதியார் பாடலை பாடியுள்ளார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என பாடி முதல் பெண் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததில் பெருமை அடைவதாக கூறினார் ப.சிதம்பரம். அப்போது எதிர் தரப்பில் அமர்ந்திருந்த நிர்மலா சீதாராமன் பாடலை ரசித்து புன்னகைத்தார். இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் பட்ஜெட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து பேசினார்.