இந்தியா
சிதம்பரம் பயங்கரவாதி அல்ல; உள்துறை, நிதியமைச்சராக இருந்தவர்: திருமாவளவன் பாஜக மீது காட்டம்!
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ப.சிதம்பரத்தின் கைதை கண்டித்துள்ளார்.
ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல; நாட்டின் உள்துறை, நிதியமைச்சராக இருந்தவர். சிதம்பரத்துக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், மிகவும் அநாகரீகமான முறையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டின் சுவர் ஏறிக்குதித்து சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ள முறை ஜனநாயக நாட்டில் ஏற்கத்தக்கதல்ல.
அவர் வீட்டுக்குள் இருப்பது தெரிந்திருந்தும் ஊடகவியலாளர்கள் கண்முன்னே சிபிஐ அதிகாரிகளும், வருமானவரித்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர். வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்துக்கொண்டு சில சிபிஐ அதிகாரிகள் உள்ளே வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தேவையில்லாமல் அவரை அவமானப்படுத்திக் கைது செய்துள்ளனர். மத்திய அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என கூறியுள்ளார் திருமாவளவன்.