தமிழ்நாடு
சென்னை பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு! புதிய தேதி என்ன?
ஜனவரி 21-ஆம் தேதி தொடங்க இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்றும் அதில் பாதிக்குமேல் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் இந்த செமஸ்டர் தேர்வுகளில் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு சென்னை பல்கலைகழகத்தில் ஜனவரி 21-ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்வு எப்போது நடத்தலாம் என்பது குறித்து விரைவில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்றும் தேர்வு தேதிகள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஜனவரி 20ஆம் தேதி வரை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.