தமிழ்நாடு
நாளை பிரதமர் சென்னை வருகை: போக்குவரத்தில் என்னென்ன மாற்றங்கள்?
பிரதமர் மோடி நாளை சென்னை வர இருப்பதை அடுத்து போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் 5 மணிநேரம் திருப்பி விடப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சென்னை வருகையையொட்டி 14.02.2021 அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.
* கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்டபடி திருப்பிவிடப்படும்.
* கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
* அண்ணாசாலையிலிருந்து இராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
* சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.