தமிழ்நாடு
எச்.ராஜாவை அனைத்து ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்
பாஜக பிரமுகர் எச் ராஜாவை அனைத்து ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக பிரபலம் எச் ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். மதமாற்றம் கும்பலுக்கு பத்திரிகையாளர்கள் துணை போவதாகவும், பொய்யான செய்திகளை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வருவதாகவு,ம் பத்திரிகையாளர்கள் என்றாலே பிரஸ்ட்டியூட் என்றும் அவர் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து பல பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய சமூக ஊடகங்களில் எச் ராஜாவை அனைத்து ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும், இது குறித்து அனைத்து ஊடக ஆசிரியர்களும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை அநாகரிகமாக பேசிவரும் பாஜகவின் எச் ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவின் எச் ராஜாவை அனைத்து ஊடக நிறுவனங்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக பிரமுகர் ஒருவர் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.