தமிழ்நாடு
வங்கக்கடல் நில அதிர்வால் சென்னைக்கு பாதிப்பும் இல்லை: வானிலை மையம்!
சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த நில அதிர்வால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி காலை 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழ் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த நில அதிர்வு 3 நொடிகள் வரை நீடித்துள்ளது. மேலும் அதிகாலை 1.30 மணி அளவில் சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதன் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் உள்ள நிலநடுக்கக் கருவிகளில் பதிவாகியுள்ளதாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும், வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.