தமிழ்நாடு
இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் புதுக்கோட்டையிலும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்பட்டாலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் வடக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் சென்று மீன் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.