தமிழ்நாடு
10ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழக வரலாற்றில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் 10-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பரவலாக மார்ச் 10ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் வடக்கு தமிழக பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்றும் எனவே இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.