தமிழ்நாடு
இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை!
இன்றும் நாளையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அதாவது இன்றும் நாளையும் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகத்தின் கடற்கரையை ஒட்டிய மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய இலங்கை பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
அதேபோல் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.