தமிழ்நாடு
6 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை குறித்த நிலவரங்களை அறிவித்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதேபோல் வட மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 28ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளீல் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.