தமிழ்நாடு
குறைந்த காற்றழுத்த தாழ்வு: சென்னைக்கு மழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆறாம் தேதி கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.