தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.