தமிழ்நாடு
5 மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை உள்பட தமிழகத்தின் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதுமட்டுமின்றி பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று விழுப்புரம், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரபிக்கடல் பகுதியில் வரும் 27-ஆம் தேதி வரை 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.