தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்ட குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் லேசான மழை பெய்யும் என்று சென்னை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று நீலகிரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும், அதை ஒட்டிய சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் ஏழாம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இதனால் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.