தமிழ்நாடு
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 நாட்களுக்கு கனமழை!
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியிருப்பதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இதன்காரணமாக நாளை மறுதினம் வரை கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்
மேலும் இன்று நீலகிரி, கோவை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.