தமிழ்நாடு
5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி கோவை மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை ஆகஸ்ட் 15 மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.