தமிழ்நாடு
மார்ச் 12 முதல் தமிழகத்தில் மழை ஆரம்பம்: வானிலை ஆய்வு மையம்
மார்ச் 12 முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் முதல் கோடை வெயில் ஆரம்பமாகும் என்ற நிலையில் 130 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் வானம் வறண்ட நிலையில் இருந்தாலும் மார்ச் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களில் மிதமான மழை மாநிலம் முழுவதும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படும் என்றும், இதன் காரணமாகவே மார்ச் 12 முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் மாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.