தமிழ்நாடு
இன்று முதல் 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி கடலூர் மாவட்டம் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் அரியலூர், திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.