தமிழ்நாடு
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு: டிசம்பர் 2ஆம் தேதி வரை மழை தொடரும் என அறிவிப்பு!
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் உபரிநீர் திறந்து விடப்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசம்பர் இரண்டாம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தெற்கு அந்தமான் பகுதியில் மீண்டும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றும் என்பதால் இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர கூடும் என்பதால் டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.