தமிழ்நாடு
இன்றுமுதல் 3 நாட்களுக்கு பீச் செல்ல முடியாது!
இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை மெரினா கடற்கரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இதனிடையே உருமாறிய கொரோனா பரவலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக காணும் பொங்கலன்று மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில், 16 ஆம் தேதி மெரினா கடற்கரை செல்லத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், அதற்கு முந்தைய நாளும், பிந்தைய நாளும் கடற்கரைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காணும் பொங்கலை அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், அப்போது மக்கள் கூடலாம் என்று கருதி, தொடர்ந்து 3 நாட்களுக்கு மெரினா செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, முகக்கவசம் அணிந்தே வெளியே வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெரினாவைப் போலவே நீலாங்கரை, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.